நவம்பர் 30, 2014

விதி விலக்கு



இப்போதெல்லாம்
தலைக்குனிவு வாழ்வுதான்.

காத்திருப்பில்

பயணத்தில்
நடக்கையில் மட்டுமல்ல
உண்ணும் போது
உரையாடும் போதென
உறங்கும் நேரந்தவிர்த்து
ஒவ்வோரு பொழுதும்...
தலைக்குனிவு வாழ்வுதான்!

மாற்றாக

எங்கேனும் எவரேனும்
தலைநிமிர்ந்து
தன்னைச் சுற்றிய
உலகை ரசிக்கலாம்...
தொடுதிரைப் பேசியை
தொடாத மனிதராய்!.

அக்டோபர் 17, 2014

காதல் தின்றவன் - 30


நீயும் நானும்
பேசிக்கொள்ளும் சொற்களிலிருந்தே
தனக்கான,
கவிதையை எழுதிக்கொள்கிறது
இந்தக் காதல்.

செப்டம்பர் 16, 2014

காலப்பெட்டகம்


காலப்பெட்டகம் – 
ஒவ்வோரு பக்கமாக
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
அன்றைய பொழுதுகளின்
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
நஞ்சுண்டு
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
ஒருவர்பின் ஒருவராக
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
சேலையால்
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
மாலையை எடுத்து
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
திருநீறு பூசிவிட்டு
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
விபத்தில் சிக்கி
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
என்றேனும் யாராவது
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
http://singaporecliche.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/#comment-128

ஜூலை 27, 2014

இணைக்கோடுகள்

இணைக்கோடுகள்.
ஆக்கிரமிப்பு வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
இவர்கள்,
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
காற்றைத்தவிர
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கேள்விக்குறிகளாய் வாழும்
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
தாக்கவரும் எரிகணைகளை
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
எரிகணையின் பலமும்
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.

ஜூன் 03, 2014

வெட்கம்


கன்றுக்கே கொஞ்சம்தான்
கறப்பதெல்லாம் உங்களுக்கே.

பாலாக மாறிய உதிரத்தை
பருகுகின்றீர் ...
பரவாயில்லை என்
உதிரம் உங்கள்
உயிர் காக்கிறது.

மர அட்டைகளால்
பனையளவு நிற்கும்
நடிகனின் உருவத்திற்கு
குடங்குடமாய்
என் வெள்ளை இரத்தம்!

கொம்பு இருந்தென்னப் பயன்
வெட்கப்படுகிறேன்.

இந்தச்
சொரனை அற்றவர்களுக்கு
எருமை என்று
என் பெயர் சூட்டாதீர்கள்
அவர்கள்
வெட்கங்கெட்டவர்கள்!

(31-05 2014 ல் கவிமாலையில் பரிசுப் பெற்ற என் கவிதை)

மே 04, 2014

மயிலிறகு


நரை தொடங்கிய 
வாழ்வின் நடுப்பகுதியில் நாம்

உனக்கும்
குடும்பம் குழந்தைகள்.

எனக்கும்
குடும்பம் குழந்தைகள்

அன்று...
நீ கொடுத்த மயிலிறகு
இன்றும்
என் புத்தகத்தின் நடுவே.

அது
குட்டியும் போடவில்லை
செத்து போகவும் இல்லை.

ஏப்ரல் 06, 2014

மழையின்றி அமைந்த உலகு



நெஞ்சுக் கூட்டின்
நிழற்படம் போல்
இலைகளை இழந்து
கிளைகளோடு மட்டுமே
“மரமென” நிற்கிறது.

வெப்பச் சூட்டில்
பொசுங்கி கிடக்கின்றன
ஒருக் கிளையில்
ஒருக் கூட்டில்
இரண்டு குஞ்சுகள்.

இளைப்பாற எவருமின்றி 
தனித்துக் கிடக்கின்றன
அந்த மரத்தின் கீழ்
அசையா இருக்கைகள்.

மரத்தை சூழ்ந்திருந்த புல்வெளி
மஞ்சள் கூழங்களாகி விட்டது.
ஏழெட்டு மாதங்களாய்
மழையையே பார்க்காத
மண்ணின் நாக்கு
வறண்டு சுருள்கிறது.

வெப்பக் கொப்புளங்கள்
நாற்றங்கலாகின்றன
மனித உடலில்.

தங்கமாகி விட்டன
தண்ணீர்த் துளிகள்.

(தமிழ் மொழி மாத நிகழ்வின், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் கவிதை போட்டியில் ஊக்க பரிசு பெற்ற எனது கவிதை)
விழா நாள் 05-04-14.



மார்ச் 27, 2014

கவிதைப் பட்டிமன்றம்

வணக்கம்...

2010 ல் சிங்கப்பூர் தமிழ்மொழி மாதம் நிறைவுநாள் விழாவில், கவிமாலை நிகழ்த்திய "தற்காலத் தமிழ்வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பது... மரபுகவிதைகளே! புதுக்கவிதைகளே!" என்னும் தலைப்பில்.... நடந்த "கவிதை பட்டிமன்றத்தில்" நான் மரபுக்கு ஆதரவாய் கவிதை பேசிய காணொளி.





மார்ச் 23, 2014

கிணற்றுத் தவளை

அன்றொரு நாள் 
விற்பனைப் பொருளுடன்
வீட்டிற்கு வந்திருந்தனர்
வியாபாரிகள் .


விருந்து உபசரிப்புக்கு பின்
விற்பனை பொருளின்
தரம் பேசப்பட்டு
தரத்திற்கு ஏற்றார்போல்
விலை பேசப்பட்டது.

கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில்
தரகனின் பேரம்
இருதரப்பினராலும்
ஏற்கப்பட்டது.

பேசப்பட்ட அளவில்
வாங்கியவர்
கொடுத்தனுப்பினார்
பணம்
பாத்திரம்
வாகனம்
நகை
இருபத்தொரு வயது மகள்.

'கிணற்றுத் தவளை' யாகிப்போனது
இருபத்தொரு ஆண்டுகள்
சிறகடித்த உயிர் ஒன்று.

மார்ச் 10, 2014

காதல் தின்றவன் - 49


உன்மீதான
காதலை புதைத்தேன்.
அது
கவிதையாய் முளைக்கிறது.

மார்ச் 02, 2014

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”

கண்மணி குணசேகரனின்
“அஞ்சலை” (நாவல்)
தமிழினி வெளியீடு.

அண்ணன் கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” 320 பக்கங்களை கொண்ட நாவல். இதை ஒரு வாரத்தில் படித்தேன். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் பழக்கம் எனக்கில்லை, நாவலின் உணர்ச்சியயை உள்வாங்கிக்கொண்டு அதில் என்னையும் திணித்துக்கொண்டே படித்து பயணிப்பது என் வழக்கம்.

இதை வெறுமனே சிறந்த புத்தகம் என்றோ அருமையானக் கதையென்றோ போகிற போக்கில் சொல்லிபோக முடியாது. இது விருத்தாசலம்,திட்டக்குடி,பெண்ணாடம் பகுதியை ஒட்டிய எளிய மக்களின் வாழ்வியல். அவர்கள் பேச்சு மொழியாகவே நாவல் நகர்கிறது.

ஒரு முப்பது மைல்களுக்குள்ளே சுழலும் கதையில், காலம் அஞ்சலை என்னும் பாத்திரத்தை எப்படியெல்லாம் உருட்டுகிறது? தென்றலாய் தழுவும் காலமே அஞ்சலையை சூராவளிக்குள் இழுத்துச் செல்கிறது. அஞ்சலையின் வாழ்வில் குறுக்கிட்டு விளையாடிய சின்னக்காவூட்டுக் காரன்,புருசனாட்டம் வந்தவன்,புருசனா வந்தவன்,புருசன் வேசம் போட்டவன் தாங்குவான்னு நெனச்ச தம்பி மற்றும் பெரியக்காகரியின் சுய நல தந்திரம், அரவனைக்கும் சின்னக்காகாரி தாய் பாக்கியம் மற்றும் வள்ளி, எப்போதும் அழுத்திகொண்டிருக்கும் வெண்ணிலா நெனப்பு, ஊர் சனங்களின் சாடை பேச்சு. இதையெல்லாம் மீறிய அஞ்சலையின் நகர்வு அப்பப்பா என்னடா வாழ்க்கைன்னு படிக்கும் போதே மிரட்டுற எழுத்து. படித்த பின்னும் இன்னைக்கும் நிலாப்புள்ள வாழ்க்கை கரையேறி இருக்குமா? அஞ்சயா, செல்வி வாழ்க்கையாவது வசப்பட்டிருக்குமா?புருசன் மண்ணாங்கட்டியும் பழையப்படி அனுசரனையா இருப்பனா? அந்த பாவப்பட்ட மண்ணில அஞ்சலை இறுதி சுகப்பட்டதா? என மனதை கருக்கறுவாளால் கொண்டு அறுத்துகொண்டிருக்கிறது.

திறன்மிகு படைப்பாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

ஜனவரி 12, 2014

காதல் தின்றவன் -13

சீப்பில் சிக்கிய
தலைமுடிகளை
தூர எறிகிறாய் நீ.
காத்துருந்து
களவாடிச் செல்கிறது
காற்று.

ஜனவரி 01, 2014

காதல் தின்றவன் - 47

கொஞ்சம்
வெளியே வா...
உன்னைக் காட்டித்தான்
சோறூட்ட வேண்டும்,
நிலவுக்கு.
Related Posts with Thumbnails